கதம்பம் - 2.....
நினைவலைகளில் கோவை திரையரங்குகள்
பொய்த்துப் போன தென்மேற்குப் பருவ மழை....ஆனாலும் இதமான பருவ நிலை. முழுமையாக காலை நேரத்து பரபரப்புக்கு ஆளாகிக் கொண்ட கோவை மாநகரின் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அன்னபூர்ணா உணவகத்தில் காபி சாப்பிட்டு விட்டு நானும் நண்பர் திரு.அமரநாதன் அவர்களும் சிரித்து பேசிக்கொண்டிருந்தோம்.
தன்னுள் மறைத்து வைத்திருக்கும் சந்தோஷத்தை இன்னும் கொஞ்சம் கூட புகைப்படத்தில் காட்டியிருக்கலாம்
திரு.அமரநாதனின் நிழற்பட கனவுகளின் பழம் நினைவுகளைப் பற்றி இன்றைய தினம் ஜூலை 4, 2012 ஹிந்து நாளிதழின் மெட்ரோ ப்ளஸில் முகப்பு கட்டுரை வந்திருந்தது இன்று உச்சரிக்க மறந்துவிட்ட அன்றைய வெரைடிஹால் தியேட்டரின் முகப்பு படமும்., இன்றைய பெயர் டிலைட் தியேட்டர்.... பசுமைபோர்த்திய நகர்மன்றத்தின் அருகே உள்ள மணிக்கூண்டின் பழைய புகைப்படமும் பிரசுரிக்கப் பட்டிருந்தன.
Click here
தென் இந்தியாவில் முதல் திரையரங்காக வெரைட்டிஹாலைக் கொண்டு வந்த சாமிக்கண்ணு வின்சென்ட அவர்களை இந்த நேரத்தில் நினைவு கூற வேண்டும்
வெரைட்டிஹால் தியேட்டரின் முகப்பு அலங்காரமும்., சிலைகளும்., பொங்கி வழியும் நீரூற்றும்., நந்தவனத்தில் மலர்ந்திருந்த பூச்செடிகளும்., என் நினைவுகளில் நிழலாடின... என் குழந்தைப் பருவத்தில் அத்திரையரங்கத்தில் ஹரிச்சந்திரா திரைப்படத்தைக் காணச் சென்ற போது நீண்ட நெடிய வசனப் பாடல்களுக்கு நடுவே ஒலித்த என் அழுகைக் குரல் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
அந்தத் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த பொழுது சிறுவனாக இருந்த நான் இருக்கையை விட்டு அடுத்த இருக்கைக்கு தாண்டிய பொழுது., கீழே விழுந்து இருக்கையின் குறுக்குச் சட்டத்தில் பட்டு வெட்டுக் காயம் ஏற்ப்பட்டது அதன் தழும்பு இன்னும் என் வலது கண் அருகே.........
தன் கட்டுரையில் திரு.அமரநாதன் குறிப்பிட்டிருந்த அந்த ஹிந்தி திரைப்படம் ”கேல் கேல் மெய்ன்” அந்த அழகு தேவதை நீட்டுசிங்கின் லட்டு மாதிரியான உருண்டை முகத்தில் திராட்சை கண்கள்., சிரிக்கும் போது குழிவிழும் கன்னங்கள்., மற்றும் நீண்ட கூந்தலுடன் ரிஷிகபூருடன் குதித்து விளையாடும் நடனம் ., இனிமை தெவிட்டாத திரை இசைப் பாடல்கள்.... இன்று நினைத்தாலும் நினைவலைகளில் இளமை பொங்குகிறது......
ஒரு வருடத்திற்க்கு மேலே ஓடிய ”ஷோலே” படமும் அந்த வெரைட்டிஹால் தியேட்டரில்தான்.
திரு.அமரநாதன் குறிப்பிட்டுள்ள ரெய்ன்போ தியேட்டர்., அந்தக் காலத்து கோவை மாநகர மக்களின் மனதில் வானவில்லின் வண்ண ஓவியமாய் பதிந்திருக்கும் மற்றும் ஒரு திரையரங்கு. எண்ணற்ற ஆங்கில படங்கள்., அதில் என் குழந்தை பருவத்தின் நினைவுகளில் பதிந்திருக்கும் முக்கிய திரைப்படம் ”ஹட்டாரி”
அந்த வானவில் தியேட்டர் கலையும்போது கடைசியாகத் திரையிட்ட படம் ”தி ப்ளாக் ப்யூட்டி”........ ஒரு கவிதை.
மாற்றங்களினால் கலைந்து காணாமல் போன பல திரையரங்குகளில் குறிப்பிடத் தக்கவை..., மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து திரைப்படங்களை திரையிட்ட ஸ்ரீநிவாஸ் தியேட்டர்., திரை அரங்கை ஒட்டியே ரயில் பாதை., அதனால் இடை இடையே திரையரங்கத்தினுள் தடதடக்க ரயில் வண்டி ஓடும் சப்தம்....
லைட் ஹவுஸ் என்று அழைக்கப் பட்ட கென்னடி தியேட்டர்., உருகி உருகி தன்னில் மலர்ந்த உணர்வை வெளிக் கொட்டும் பாடல் ஒன்று ., கை கூடி வந்த காதலில் சந்தோஷப் பாடல் ஒன்று., குரும்பும் காதலும் கொட்டிய திரைப்பாடல் ஒன்று., ஊடலில் அடிப்பட்டு பாடப் பட்ட ”கவாலி” சோகப் பாடல் ஒன்று., காதலியின் குடும்பத்தில் கிடைத்த பாச மயமான கூட்டுப் பாடல் ஒன்று., இத்தனை உன்னதங்களும் கலந்த ., டிம்பிள் கபாடியாவுடன் ரிஷிகபூர் நடித்தா “ பாபி” திரைப்படம் தீபாவளிக்கு திரையிடப் பட்டது கென்னடி தியேட்டரில் தான்...
டைமண்ட் டாக்கீஸ்...... என்று அழைக்கப் பட்ட முருகன் தியேட்டர் ., ஐந்து முறைக்கு மேல் நான் கண்டு களித்த எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த ”ஒளி விளக்கு” திரையிடப் பட்டது....தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா என்ற பாடலின் நடுவே ஒரே காட்சி அமைப்பில் ஐந்து வெவ்வேறு சிகை., மற்றும் உடை அலங்காரத்தில் வந்து அசத்துவார்.
இதே முருகன் தியேட்டரில்., எம்.ஜி.ஆர் சரோஜாதேவி நடித்த
“பெற்றால் தான் பிள்ளையா” திரைப்படத்தில் பறக்கும் காரில் ஏறி சென்னை நகரைச் சுற்றி சக்கரக் கட்டி ராஜாத்தி என்று டூயட் பாடுவார்
தெலுங்கு C.I.D., மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களை காலைக் காட்சியாக ஓட்டிப் புகழ் பெற்ற ”சுவாமி தியேட்டர்” . உலகத்தையே சுற்றி வந்த வாலிபனைத் திரையிட்ட ”ராஜா தியேட்டரும்” எங்கள் நினைவுகளில் வந்து சென்றது.... “ நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படத்தில் வில்லத் தன ஒப்பனையில் பயமுறுத்திய எம்.என்.நம்பியார் அடுத்ததாக எங்களை அதிரடித்து பயமுறுத்தியது ”உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தில் ஜப்பானிய புத்த விகாரத்தில் தோன்றும் போதுதான் .
”சென்ட்ரல்” திரையரங்கில் திரையிடப் பட்ட பற்பல பிரமிக்கத் தக்க Where Eagles Dare., Guns of Navarone., Mackenna's Gold., Good Bad Ugly., போன்ற ஆங்கில படங்களின் நடுவே நான் ஆனையிட்டால் அது நடந்து விட்டால் என்று பாட்டு பாடி., அவ்வளவு பெரிய உடம்பை ”ட்விஸ்ட் டான்ஸ்”., ஆடி நடித்த எம்.ஜி.ஆர் படமான ”எங்க வீட்டுப் பிள்ளை”யில் அந்த பாட்டின் நடுவே பிரமாண்ட படிக்கட்டுகளின் மிக அருகிலிருந்து எடுக்கப்பட்ட கோணத்தில் closeup shot. எம்.ஜி.ஆரின் தனித்துவம் தெரியும் சுவாரசியமான எங்கள் பேச்சில் இதையும் பகிர்ந்து கொண்டோம்.
1979 ல் கவுளிபிரெளன் சாலையில் நகரத்தார் சங்கத்தின் முதல் மாடியில் சத்தியஜித்ரேவின் ”ஜல்சாகர்” திரைப்படம் ஒரு மார்கழிமாத குளிர்க் காலத்தில் 16 எம் எம் திரையில் திரையிடப் பட்டது .
வாழ்ந்து.... தாழ்ந்து போன ஜமீந்தார் வாயில் திண்ணையில் கோலோச்ச எவரும் இன்றி தானம் செய்ய எதுவும் இல்லாமல் வெற்றுப் பார்வையில் அமர்ந்திருக்க.., தூரத்து கானலில் பட்டத்து யானை அசைந்தாடி வருவதை நினைவிலும்., நினைவில் இல்லாமலும் உணர்ந்தவாரு ஒரு காட்சி அமைப்பு இன்றும் என் நினைவில் நின்றதை திரு.அமரநாதனிடம் பகிர்ந்துகொண்டேன்
புன்னகைத்தவாரே கூறினார் அன்று அந்த திரைப்படத்தை திரையிட்டதே எங்கள் ”தர்சனா” திரைப்பட சங்கம்தான்...
காலை நேரத்து கடமைகள் எங்களை அழைத்தது....
சிரித்தவாறே சந்தோஷத்துடன் கைகுலுக்கி விடை பெற்றோம்......
நாங்கள் பருகிய அன்னபூர்ணாவின் காபியின் சுவை நுனிநாக்கு வரை நின்றிருந்தது.... எங்கள் நினைவுகள் போல
என்ன ................. காபி இன்னும் கொஞ்சம் கூட சூடாக இருந்திருக்கலாம்.
No comments:
Post a Comment