Thursday, July 26, 2012

வசந்த பஞ்சமி இசை விழா


வசந்த   பஞ்சமி  இசை  விழா............ காட்சி  ஒன்று....
”..............T.M.கிருஷ்ணாவின்  கச்சேரி  காலை  6.45 மணிக்கு......ராம் நகர்  ராமர் கோயில்ல....  நீங்களும்  வர்ரீங்க.....” ன்னு எனை  இழுத்துச்  சென்றார்.........எங்க  வீட்டு அம்மிணி.









  
"ராம்நகர்  ராமர்கோயில்" கோயம்புத்தூர்.......





மஞ்சள்  பூ  மாலையில்  சீதாராமனையும்  லட்சுமணனையும்.,  தரிசித்துவிட்டு.....அரங்கினுள்   நுழையும்  போது.,

கீர்த்தனையை., சிறிய  ஆலாபனையோடு  முடித்துவிட்டு  கை  தட்டல்  வாங்கிக்கொண்டிருந்தார் T.M..கிருஷ்ணா...!



அரங்கம்  நிறைந்திருந்தது...........கெளரவங்களால்.

”இது..நானாக்கும்.,அது  நீயாக்கும்.,........இது  நானே  நானாக்கும்......அது  நீயே  நீயாக்கும்...”என புறக் காரண  காரியங்களை நிரப்பிக்கொண்டு.  .... அரங்கம் நிறைந்திருந்தது.


அங்கொன்றும்    இங்கொன்றுமான   அமெரிக்கன்  டைமெண்ட்கள்  மத்தியில்,.  நிறைய   வைரக்கம்மல்கள்.,  வைரமூக்குத்திகள்  பொங்க.... முதிர்  மனைவிகள்.   

 இளம்  மனைவிகள்  மத்தியில்  ஒற்றை வட கல்  அட்டிகை.  

முதிர்., முதிர்  பாட்டிகளிடத்தில் ....வலுக்கட்டாயமாக  புளு  ஜாகரில்  தோடும்., மூக்குத்தியும்  ஜொலித்தன.


மாநிறப்   பெண்கள்   மத்தியில்   வெண்மையின்   வெளிச்சம்...

அதுவும்   எப்படி.?   வெண்மையில்  இத்தனை   நிறங்களா...!  எனக்   கேள்வி   கேட்கும்   வகையில்....

பசு  வெண்ணெய்யின்   வெண்மை. எருமை  வெண்ணெய்யின்   வெண்மை. ரகத்திற்கு   ஒன்றாக  ஒரு   நாள்  புளித்த.,  இரு  நாள்   புளித்த   , மூன்று   நாள்  புளித்த   வெண்ணெய்யில்   மஞ்சள்  மலர்ந்திருக்குமே........  அப்படியான   மஞ்சள்  வெண்மையிலும்   பெண்கள்.



கூந்தல்பெரும்பாலும்   குறைந்து   விட ..., புடவையில்   படோடோபம்   மிளிர்ந்தது. 

புன்னகைக்குப்   புன்னகை.,  புன்   சிரிப்புக்குப்   புன்சிரிப்பு.,  சிரிப்புக்குச்  சிரிப்பு., கண்  அசைவு   அங்கிகாரத்துக்கு..அங்கிகாரம்.,

.....எல்லாவற்றிலும்   பட்டுத்தெரித்தாற்   போன்ற   அதிர்வுகள்   மிளிர்ந்தது.......அகங்கார   அழகியலாக.......!



பதவி  நிறைவு   பெற்று   வந்த   பெரும்பான்மை   ஆண்கள்   மத்தியில்   அதே   கம்பீரம்..

 மருத்துவர்கள்., ஆடிட்டர்கள்., மற்றும்  ஒன்றிரண்டு வியாபார   உலகில்   கோலோச்சியவர்கள்........,  தத்தம்   மனைவியர்களுக்கு  அருகே   தேமே  என்று அமர்ந்திருந்தார்கள்



”நான்  I.T. Coridor  ஆக்கும்”  என  சொல்லாமல்  சொல்லிய  இளம் வட்டங்கள்., 

தம்   இளம்    மனைவியர்   அரங்கத்தின்   உள்ளே இருக்க....  ஓர்  இடத்தில்  நிற்க   முடியாமல் 

கைத்தொலைபேசியுடன்   வராந்தாவின்  இரு  முனைக்கும்  அலையும்  MBA.,க்களும்  I.T., க்களும்   பரபரப்பை   முகத்தில்  மட்டுமல்ல ...  உடல்   அசைவு  மொழிகளிலும்  காட்டினார்கள்....



தமிழகத்தில்  பிறந்து.,   வளர்ந்து.,  அமெரிக்காவில்   தன்னை    நிலை   நிறுத்திக்   கொண்டு.,   விடுமுறைக்காக   கோவைக்கு  வந்த  உலக  பிரகஸ்பதிகள்   இளம்  தொப்பைகளுடன்..., 

தொப்பைகளுக்கு   மேலே   ஊஞ்சலாடும்   நீண்ட   கேமிராக்களுடன்  
தொப்பை  போட்டோகிராபராக   இடமிருந்து   வலம்   வந்தனர்.....


மேடையிலே   சுருதிப்   பெட்டியுடன்  தம்புரா.,   மிருதங்கம்.,  வயலின்.,  வீற்றிருந்தது....   அதன்   ஆகிருதியில்   கடமும் .,  கடம்  வாசிப்பவரும்   காணாமல்   போயிருந்தார்கள்  

இவர்களுக்கு   மத்தியில்   T.M.கிருஷ்ணா   மத்தியமான   இளமையைத்   தாங்கிக்கொண்டிருந்தார் ...





நவநாகரீகத்தின்   அடையாளமாக  ”ஜீன்ஸ்   பேண்ட்”  பெண் ;  காட்டன்  மேலங்கி ;   குறுகலான   முடி  அலங்காரம்  ; அழகியலின்  முத்தாய்ப்பாய்   துளிப்   பொட்டு ;   கையில்   செல்போன்   ;  கால்  மேல்   கால்  போட்டு   அமர்ந்திருந்தாலும்    அந்த   பெண்ணின்   முகத்தில்  சாந்தம்    தவழும்   புன்னகை...


"எனக்கு   வெஜிடபிள் பன்னீர்  பிஸா   போதும் ;  தயிர்சாதம்   ஒரு   கரண்டி   போதும் ;  இஞ்சிப் புளி  ஒரு  துளி போதும் ; T.M. கிருஷ்ணாவின்   இந்த   சாகித்திய  சங்கீதம்   போதும்....." என்று   விரும்பியதைத்   தேர்ந்தெடுத்து ., போதும்   என்ற   அளவில்    நிறைவைத்தறும்   முகம்.


பேக்கு   மாதிரி   மூலையில்   உட்கார   வைத்துவிட்டார்கள்.....வாதாபி   கணபதியை...! எத்தனை   தடவை... எல்லா கச்சேரிகளிலும் கேட்டாச்சு.

 ”மற்றும்   ஒரு    நிகழ்வு”   எனும்   உணர்வில்   சோபையின்றி    கைதட்டல்.


சூர்யதாஸர்-பார்வையற்றவர்   இயற்றிய   கீர்த்தனையை 
T.M. கிருஷ்ணா   ஆரம்பிக்க...... கூட்டம்   செவிமடுக்க....ஸ்வர   ஆலாபனையை   சற்று   எறக்குறைய   ஆறு   நிமிடங்கள்   நடத்த.,
தொடர்ந்து   வயலினுக்கும்  ஐந்து   நிமிடங்கள்  தந்துவிட...... 
கீர்த்தனை   முடிவில்   சஞ்சாரத்தில்   சிறிதான  ஆர்ப்பரிப்பு....!


அது   முடிந்து   “ஏ...கோபாலா.....ஏ.... கோவிந்தா...” எனக்   கூப்பிடும்போது...நேரம்   சரியாக  காலை  எட்டு  மணி..
கை   தட்டலுடன்   பல   ஜனங்கள்., காலை   உணவிற்கும் ., பிரெஷர்  மற்றும்  சர்க்கரை  வியாதி  மாத்திரைகளுக்கும்..,  

”கிளினிக்”   திறக்கப்போகும்  அவசரத்துக்கும்..,  ”புருஷன்  போனால்  பொண்டாட்டியும்   போகணும் “ என்ற  கட்டுப்  பாட்டுக்கும்  
ஏற்ப  “சட்...சட்...”  என்று   கூட்டத்தின்   ஒரு  பகுதியினர்   எழுந்து  புறப்பட்டார்கள்.   


”கண்கள்  இருக்கும்  போதே  சிதம்பரநாதனை   காண  வேண்டாமோ.....!” என்று  T.M.கிருஷ்ணாகேட்டபோது.,
 
பிரபல  மருத்துவரின்  பின்னால்  கிளம்பிச் சென்ற   மருத்துவரின்   மனைவி..... 

அவரும்   மருத்துவர்தான்......

 
  “அட தமிழ்ப் பாட்டு ....  இதைக்  கேட்டுட்டு  வந்துடறனே....” 
என்று   கொஞ்சலுடன் கெஞ்ச ...,  பிரபல  மருத்துவர்   புன்சிரிப்பைக்   கொட்டாமல்  ”சரி” என   வெளியே   நகர்ந்தார்.

கணவர்  வெளியே  செல்வதற்கு  முன்பு.,   கணவருடன்   அமர்ந்திருந்த   மருத்துவ  மனைவி ரசிகத்  தன்மையில்.,அமைதியின்.,  அடக்கத்தின் சொரூபமாக   அமர்ந்திருந்தார்.

”ஆஹா...பேஷ்..பேஷ் ..என்ன   ஒரு  தனி ஆவர்த்தனம்.”தன்  தனிமையில்., அந்த   மருத்துவ  மனைவியின்   ரசிகத்தன்மையில்....எத்தனை  எத்தனை   உற்சாகம்;  உத்வேகம்  ; கூடவே  பாட..., முகம் முழுவதும்.. அபிநயம்  களைகட்ட... விரல்களில்  தாளம்  லயமிட...பரவசத்தை  அள்ளிப்பருகிய   திருப்தி... அவர்  முகத்தில்.பக்கத்தில்   உற்சாகமாய் இரு  தோழியர்  வேறு.

மீண்டும்   திரும்பி  வந்த   பிரபல   மருத்துவர்  “என்  செல்போன்..” என்று  

வினவ., அவரது மருத்துவ  மனைவியின் முகமாற்றம்  அவ்வளவு  அருகில்  அதிர்ச்சி  அடைய  வைத்தது.

பொங்கி  வரும்  பாலில்  ஒரு  டம்ளர் தண்ணீரை  ஒட்டு மொத்தமாக  கொட்டியது  போல ”புஸ்ஸ்”  எனப்போயிற்று.

பிரபல  மருத்துவர்   அரங்கத்தை  விட்டு   மீண்டும்  அகன்ற  போது  மருத்துவ  மனைவி.,

விட்ட  இடத்தில்   இருந்து   பற்றிக்கொண்டார்  தன்  சந்தோஷமான  ரசனையை..!

மூக்கில்  ஒற்றை  வைரக்கல்  மூக்குத்தி   தன் அளவில்  மினுமினுத்துக்கொண்டே  இருந்தது.


....”ஸீ..த்ரூ
”  ஆடையை  பெண்கள்தான்  அணிய வேண்டுமா..?

6.2 உயரத்தில்  ”ஸீ..த்ரூ” ஆடையில்  ஒருவர்  மல்லுவேட்டி மைனர்  கணக்காக., இழுத்துக்கட்டிய  வேட்டியின் மேல்   மிகநீண்ட  வண்ணக்குர்தாவைப்  போட்டுக்கொண்டு.,

இங்கும்  அங்கும் அலைந்து  கொண்டு  இருந்தார்.

பின் தங்கிய  பெருசுகள்   கடைசிவரை  மிகப்  பரிதாபமாக   அமர்ந்திருந்தார்கள்., அவ்வப்போது  தலை ஆட்டியவாறு.

டி.எம். கிருஷ்ணா...  ராகவேந்திரர்  கீர்த்தனையுடன்  தம்  கச்சேரியை  முடித்துக்கொள்ள...

தித்திக்கும்  இனிப்பாக “அக்கார வடிசலையும்”  மிளகுடன்  வெண்பொங்கலையும்  பிரசாதமாக 

வாங்கிக்கொண்டு  வெளியே  வந்தால்...10..,20.,30., லட்சம்  மதிப்புள்ள  கார்களின் ஒட்டுனர்கள்

வெள்ளை  உடையில்  பின்கை கட்டி  வழி  மீது  விழி  வைத்துக்   காத்து  இருந்தனர்  தங்கள் எஜமானருக்காக.வசந்தத்தின்  இசை  இன்பம்  அவர்களது  செவிகளை  எட்டவில்லை.

அவர்களுக்கு  ஒரு எம்.ஜி.ஆர்.படப் பாடலோ.,சிவாஜி படப்பாடலோ
...டி.எம்.எஸ்.,பி.பி.எஸ்.,எஸ். பி.பி...குரலில்  போதும்...
கடைசிக்கு  ஒரு  கொலை வெறி  பாட்டு கூட அவர்களைப் புன்னகைக்க  வைக்கும்.

............இசை  என்பது  எங்கும்  பரவிக்கிடக்கிறது.........











வசந்த   பஞ்சமி  இசை  விழா............ காட்சி  இரண்டு.


மரங்கள்   சூழ்ந்த  வெட்டவெளிப்   பிரதேசத்தில்.., தாவரவியல்   பூங்காவில்  ., வசந்தபஞ்சமியின்  இரண்டாம்  நிகழ்வாக

அருணாசாய்ராமின்   இசைக்கச்சேரி  காலை   பத்து  மணிக்குத்   துவங்கியது.



இங்கும்...ஜனங்கள்.......!

பொருளாதாரத்தின்  சிகரங்களை   எட்டிப்பிடிக்கும்   தூரத்தை   துரத்திக்கொண்டே   இருப்பவர்கள்.

சாகித்தியத்தின்  அடையாளத்தை   ரசித்துக்கொண்டே   கண்ணீர்  விடுபவர்கள்.

பின்  தங்கிப்போன   வயோதிகர்கள்  கைகூப்பிய   நிலையில்  சங்கீதத்தை   ரசிக்க.....,

சங்கீததை  வாசித்தவர்கள்   கூடவே   வசிக்க..., பொருள்   புரிந்தவர்கள்   உருக..,

இசை  புரிந்தவர்கள்   லயிக்க..., சின்னஞ்  சிறுசுகள்   கனவுகளை  கண்களில்   ஏந்த...,

இசையை  விட்டுப்  பிரிந்தவர்கள்., பழம்  நினைவில்  மூழ்க..,

எல்லோரையும்  தன்   குரலில்   அருணாசாய்ராம்   வசீகரிக்க...,

பற்பல   விதமான   ரசனைகள்  பொங்க..,  தாளகதியில்  கட்டுண்டு   இருந்தார்கள்.


வந்தனம்  ரகுநந்தனா.......என   ஆரம்பித்து.......

சதா  சாரங்க  நயனே......என  நயனோவில்   நம்மை   மிதக்கவிட்டு.....

மத்தியமத்திலிருந்து   பஞ்சமத்துக்கு  செல்லும்    உச்சத்தையும்.....,

காந்தாரத்தில்   நின்று   ஆடிய  ஆட்டத்தையும்....,

நிஷாதத்தில்   சொக்கவைத்ததையும்......

தன்  அபிநயத்துடன்   கூடிய  இசையால்    சிறப்பாக   செய்தார்   அருணாசாய்ராம்.

தீர்த்தவிட்டல   அபங்கத்தில் .,  சுற்றிச்சுற்றித்தாக்கும்  இசை இன்பத்தில்....,

பலருக்கு   கண்களில்   கண்ணீர்...!

ஊத்துக்காடு    வேங்கடசுப்பிரமணியர்   பாட்டான   “விஷமக்கார  கண்ணா...” பாட்டு


அனைவரையும்   தள்ளாட  வைத்தது...நிறைந்த  புன்னகையுடன்.    

இடையே..... கணபதி  பாப்பா   மோரியா   ஜோஜோ   தசரத   பாலா.......ராமாவின் 

 ஊஞ்ச்ல்   ஆட்டம்   மிகுந்தகொஞ்சலுடன்   மிளிர்ந்தது.

என்ன  கவிபாடினாலும்   எனும்   விருத்தத்துடன்... 

ஓம் முருகா  உந்தன் உள்ளம்  இரங்கவில்லை  .... எனும்   வேண்டுதலில்

உருகிக்  கிடந்தார்கள்...........ஜனங்கள்..!


நெஞ்சுக்கு   நீதியும் .., தோளுக்கு  வாளும்....என  பாரதியை   துணைக்கு  அழைத்து..,

தாமரை  பூத்த  தடாகமடி  என்  நிரவலில்   நிரவி........

மீனாட்சி  சுந்தரேஸ்வரர்   திருக்கல்யாணத்தில்.... “போஜனம்   செய்யவாருங்கள்”  என  அழைத்து

துக்கடா  இல்லாத  குறையையும்..., தனி   ஆவர்த்தன  நிகழ்வையும்   தவிர்த்து....,

நிறைவாக.......தானே.....  இசை  மேடையையும்  .,  ஜனங்களின்  உள்ளத்தையும் 

 ஆக்கிரமித்துக்  கொண்டார்   அருணாசாய்ராம்    அவர்கள்.


டி. எம். கிருஷ்ணா...ஆகட்டும்...,அருணாசா
ய்ராம்   ஆகட்டும்  ....நேரடிக் கச்சேரிகளில்  ., அவர்களைப்

 பார்த்தவாறு அமர்ந்திருக்கும்   ரசிகர்களை.,  இசை   பயிலாத  ரசிகர்களைக்கூட..,இரு  வழிகளில்  இசைக்குள்

 அழைத்துச்  சென்று  விடுகின்றனர்.

ஒன்று......!


குரலின்   இனிமை., கம்பீரம்., உச்சம்., குழைவு.,...........மற்றும்   சாகித்தியம்.


இரண்டு....!


முக பாவ  கை  அசைவுகள்.




ஆரோகணமும்  அவரோகணமும்.,  ஸ்வர   ஆலாபணையும்.,  ஸ்வர  சஞ்சாரமும்.,  ஷட்ஜமம்  முதல்  நிஷாதம் வரை

இசை  பயிலாதவர்கள்  கூட ., மீண்டும்  மீண்டும் வாய்ப்பை   ஏற்படுத்திக்கொண்டு   கேட்ட   கேள்வி  ஞானத்தில்.,

எங்கு  எப்படி  துவங்கி., எங்கு  உள்  இழுத்து., எங்கு  உயர்த்தி., எங்கு  நின்றபடி  நிரவல்  செய்து .,எங்கு  நம்மை 

மிதக்கவிட்டு.,  எங்கு  நம்மை தவிக்க  விடுகிறார்கள்.........  என  உணர்த்திச்  சென்று  விடுகிறது  அருணாசாய்ராமின் 

முக... பாவ.... கை.... அசைவுகள்


பெண்மை  மிளிரும்  குரலில்  ஆண்மையின்  உச்ச  ஸ்தாயிக்கு  அருகே  வர   அசுர சாதகம்  வேண்டும்.

அருணாசாய்ராமுக்கு  ஓரளவு  கிட்டியிருக்கிறது.


அந்தக்  காலத்தில்......! 

ஸ்வரவரி்சையின்  சஞ்சாரத்தை  இசைக்க   எடுத்துகொண்டால்   அவரவர்  கற்பனை  வளத்தில்  நேரம்  போவதே  தெரியாது.

அந்தக்   காலத்தில்   சுருதியின்  சுத்தம்  பெரும்பாலும்  அஃக்மார்க்காகவே   இருக்கும்.

 

அந்தக்  காலத்தில்.,  தாள  லயம்  என்பது   தனி  ஆவர்த்தனம்   வரை  நூல்  பிடித்தமாதிரி  கூடவே  வரும்.


அந்தக்  காலத்தில்.,  ராகங்களின்  கம்பீரம் கேட்டாலும்  உணர்ந்தாலும்  உள்ளத்தில்  உயர்ந்து   நின்றுக்  கொண்டே  இருக்கும்...


அந்தக்  காலத்தில்.,  ”ரசம்” என்பது  பக்தியிலும்  சரி  சிருங்காரத்திலும்  சரி  கண்களில்  கரகரவென்று  கண்ணீராய்  வெளிப்படும் 

அந்தக்  காலத்திலே   இசையின்  எல்லாவடிவங்களும்  இதயத்தில்  நின்றிருக்கும்   என  எத்தனை  எத்தனையோ 

அந்தக் காலங்கள்......


ஆனால்  இன்று  பருவகாலத்தின்  மாற்றத்தைக்  கொண்டாட.,  பஞ்சமி  திதியில் .,  வஸந்ததை  வரவேற்க்க.,  வித்தியத்தை 

தரும்  சரஸ்வதிதேவியின்  பிறந்தநாளான  இன்று  கோவை  மாநகர  மக்களின்  பலருக்கு  வஸந்த   பஞ்சமித்  திருநாள்  இசை 

விருந்து  கிடைத்தது  .



                                       வானவீதியின்  நீள்வட்டப்  பாதையில்.,   ஈர்ப்பு  எனும்  அச்சில்  ., 
                                      
                                       பூமிப்பந்தின் சுழற்சியில்  பிறந்ததுதான்  பிரபஞ்ச  இசையா....!

                                       அந்த  மெளனத்தின்  சப்தத்தை  உணர்ந்தவர்   யார்....!

                                       “ஓம்” எனும்  பிரணவ  மந்திரத்தின்  ஓசையை  உச்சரிப்பவர்  யார்....!

                                        எது  எதனுடன்  தொடர்பு  கொண்டு  ஏழுஸ்வரங்களை  வரிசைப்  படுத்தியது...!

                                       அதில்  உட்புகுந்து.,  ராகங்களை  அமைத்துக்  கொடுத்து., 

                                       ஜீவிதத்தின்  உன்னதத்துக்கு  இன்னும்  ஒரு  வழி  அமைத்து  கொடுத்த  சக்தி  எது...!



                                                               பூக்கும்  புன்னகைக்கும் 

                                                               மலரும்  மலருக்கும்

                                                               ஒரு மாத்திரை  என

                                                               அளவிட்டவர்  எவர்....?       



No comments:

Post a Comment